பதவி போட்டியில் அதிமுக! கொல்லைப்புறத்தி ல் பாஜக
பதவி போட்டியில் அதிமுக!
கொல்லைப்புறத்தில் பாஜக!
விழிப்போடு இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!
செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிளவுபட்டது, அதிகாரம் மற்றும் ஊழல் பணத்தை பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்ததோ, மாநில உரிமை சார்ந்ததோ அல்ல. தற்போது பிரிந்தவர்கள் ஒரே அணியாக சேர்வதற்கான முயற்சிகளும், பிரிந்ததற்கான காரணங்களை நோக்கமாகக் கொண்டதே. லஞ்சம், ஊழல், தேர்தலில் வாக்குகளுக்கு பணவிநியோகம் அனைத்தும் ஜெயலலிதா காலத்து செயல்பாட்டின் தொடர்ச்சியே.
அதிமுகவில் 2 அணிகள் பிரிவது அல்லது இணைவது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்ற போதிலும், இவர்களது மோதலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இவர்களது சண்டையால் தமிழக அரசு செயலற்று முடங்கிப் போயுள்ளது. வரலாறு காணாத வறட்சி, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, கடும் குடிநீர் பஞ்சம், மத்திய அரசின் நீட் தேர்வால் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் தீர்வு காணப்படாமல் மக்களது வாழ்வு சீரழிந்து கொண்டிருக்கிறது. தற்போது மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி என்பதும் எள்ளளவும் தமிழக மக்கள் நலன் சார்ந்ததல்ல. தாங்கள் சம்பாதித்த ஊழல் பணத்தை பாதுகாப்பது, மீதம் உள்ள ஆட்சி காலத்தில் ஆட்சியை பாதுகாத்து கொள்ளையடிப்பதை உறுதி செய்து கொள்வது என்பதை முன்னிறுத்தியே இவ்வணிகளின் செயல்பாடு உள்ளது.
மேலும், ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது. இதற்கு வருமானவரித் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறது. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கொல்லைப்புற அரசியல் நடவடிக்கையை பல மாநிலங்களில் மேற்கொண்டு வருவது போல தமிழகத்திலும் முயற்சிக்கிறது. தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொண்டுள்ள இத்தகைய கீழ்த்தரமான முயற்சிக்கு அதிகாரமோகத்தில் அக்கறை கொண்டு அதிமுக தலைவர்கள் இடம் கொடுக்கிறார்கள்.
சட்டத்திற்கும், நியாயங்களுக்கும் புறம்பான பாஜகவின் இந்த முயற்சியை அதிமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டிக்கொள்கிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்