தி.நகரை சூழ்ந்தது கரும்புகை- 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் நாசமானது. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. நேற்று காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த கடை காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தி.நகர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூரில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடையின் 7-வது தளத்தில் கேன்டீன் உள்ளது. அங்கு 10 ஊழியர்கள் தங்கியிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூரில் இருந்து 2 ‘ஸ்கைலிப்ட்’ வாக னங்கள் வரவழைக்கப்பட்டு 7-வது தளத்தில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் கடையின் உள்ளே இருந்த 4 காவலாளிகளும் மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் தரை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தபோதே அதிக வெப்பம் தாங்காமல் 10 அடி உயர 3 பெரிய கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறின. தரை தளத்தில் இருந்து மட்டும் கரும்புகை வந்து கொண்டிருந்த நிலையில், 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த தளங்களில் இருந்தும் கரும்புகை வெளியேற தொடங்கி, 7 தளங்களிலும் தீப்பிடித்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
காலை 10 மணிக்குள் சுமார் 80 டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்த பின்னரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் 5 மற்றும் 6-வது தளங்களின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பின்னரும் தீ கட்டுக்குள் வரவில்லை.
வெப்பம் மேலும் அதிகரிக்கவே, 7 மாடி கட்டிடம் விரிசல் விட ஆரம்பித்தது. விரிசல் விடும் சத்தம் வெளியே பயங்கரமாக கேட்டது. அதை நேரில் பார்க்கவும் முடிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த அதிகாரிகள் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறி, அந்த இடத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்து, பொதுமக்கள் அங்கே வர தடை விதித்தனர். பக்கத்து கட்டிடங்களில் இருந்தவர்களையும் உடனடியாக வெளியேற்றினர். தெற்கு உஸ்மான் சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.
தீ விபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலை 4 மணிக்கு பிடித்த தீ இரவு வரை தொடர்ந்து எரிந்தது. தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்ததால் பிற்பகல் வரை வெளியில் நின்றவாறே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரமும், துளையிடும் பெரிய இயந்திரமும் வரவழைக்கப்பட்டு, கட்டிடத்தில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர்.
இரவு 7.15 மணியளவில் 4-வது தளத்தின் முன்பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தீயை அணைத்துக் கொண்டு இருந்த வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடம் முழுவதும் இடிந்து தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்திலும், அவர்கள் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து செய்தனர். தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.
‘‘கடைக்குள் ஏராளமான தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாலும், பால்ஸ் சீலிங்கில் அதிகமான பிளை வுட்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்ப தாலும் தீயை அணைக்க முடிய வில்லை. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவுகிறது. தீ அணைக்கப்பட்ட இடத்தில் கூட மீண்டும் தீ பிடித்து விடுகிறது. ஜன்னல்கள் குறைவாக இருப்பதால் தண்ணீரை செலுத்துவதற்கும் வழியில்லை. 20 மணி நேரத்துக்கும் மேலாக போராடினோம். அனைத் தும் எங்களுக்கு எதிராகவே இருப் பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சவாலாக இருந்தது. கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. இதை கண்டிப்பாக இடிக்க வேண்டும்’’ என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள் ளது. மொத்த சேதமதிப்பு கணக் கிடப்பட்டு வருவதாக சென்னை சில்க்ஸ் நிர்வாகி தெரிவித்தார்.
ஜவுளி வியாபாரத்தில் மக்களின் நன்மதிப்போடு கிளைகள் பரப்பி முன்னேறி வரும் நிறுவனம் சென்னை சில்க்ஸ். தி.நகரில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் தீப்பிடித்துவிட்டது என்ற செய்தி பரவியதுமே ஊழியர்களுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களும் கடையின் அருகே வந்து குவியத் தொடங்கினர். கலங்கி நின்றிருந்த ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆறுதல் சொன்னார்கள். நூறு கோடி நஷ்டம். இருநூறு கோடி நஷ்டம் என்ற பேச்சுகளும் அங்கே உலா வந்தன. ‘பெரிய நிறுவனம்.. இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமே மீண்டு வரும்’ என்று ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும்விதமாகவும் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.