கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா – ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்துவதற்காக இந்தியா – ரஷியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, ஸ்பெயின் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நேற்று இரவு ரஷ்யா சென்றடைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – மோடி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் கூடன்குளம் 5-வது, 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்துவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளத்தில் ஏற்கனவே முதல் இரு அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 5, 6-வது உலைகளை கட்டுவதற்காக இந்தியா – ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.