ஐசிசி சாம்பியன்ஸ் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து – வங்காள தேச அணிகளுக்கிடையே முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வங்காளதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக தமீம் இக்பால் 128 (142) ரன்களும், முஸ்பிகுர் ரஹிம் 79 (72) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ராய் மற்றும் ஹேல்ஸ் களமிறங்கினர். 3-வது ஓவரின் போது ராய் 1 ரன்னில் மொர்டாசா வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து ஹேல்ஸ் – ஜோடி ரூட் ஜோடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. இதில் ஆட்டத்தின் 28-வது ஓவரின் போது 95 (86) ரன்கள் எடுத்திருந்த ஹேல்ஸ் சபீர் ரஹ்மான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
கடைசியில் இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் ஜோ ரூட் 133 (129) ரன்களும், மோர்கன் 75 (61) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *