நகை புரோக்கரின் விரலை துண்டித்த கந்து வட்டி கும்பல்: போலீஸ் விசாரணை

கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்த கந்து வட்டி கும்பல் நகை புரோக்கரின் விரலை துண்டித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். நகை புரோக்கர் தொழில் செய்து வருகிறார்.
இவர் தொழில் மேம்பாட்டுக்காக கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தீபக் என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி உள்ளார்.
வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வட்டியையும் செலுத்தி இருக்கிறார். தொழில் நலிவடைந்ததால் கடந்த 5 மாதங்களாக வட்டி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்து வட்டி கும்பல் வட்டி மற்றும் அசல் சேர்த்து ரூ.3 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டி இருக்கிறார்.
ஆனால் அவ்வளவு பணத்தை ஸ்ரீனிவாசன் உடனடியாக திருப்பி கொடுக்க இயலவில்லை.
ஸ்ரீனிவாசனிடம் பணத்தை கேட்பதற்காக தீபக் தனது நண்பர் கார்த்திக் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். வால்டாக்ஸ் ரோட்டில் ஸ்ரீனிவாசனின் கடையில் சென்று பணத்தை கேட்ட போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஸ்ரீனிவாசனை காரில் கடத்தி சென்று சவுகார்பேட்டையில் உள்ள தீபக் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
மறுநாள் அங்கிருந்து மகாகவி பாரதி நகரில் உள்ள கார்த்திக்கின் வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார்கள்.
அங்கு அவர்கள் பணத்தை கேட்டு ஸ்ரீனிவாசனை தாக்கி இருக்கிறார்கள். அவரால் உடனடியாக பணத்தை திருப்பி கொடுக்க இயலாததால் அவரது சிறு விரலை வெட்டி துண்டித்துள்ளார்கள்.
அலறி துடித்த ஸ்ரீனிவாசன் அங்கிருந்து தப்பித்து யானைக்கவுனி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு நடந்த விபரங்களை சொல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த தீபக், கார்த்திக் இருவரையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *