நேரு குடும்பத்தின் 5 தலைமுறை வாழ்த்தைப் பெற்றவர் கருணாநிதி: துரைமுருகன் புகழாரம்
நேரு குடும்பத்தின் 5 தலைமுறை வாழ்த்தைப் பெற்றவர் கருணாநிதி என்று திமுக முதனமைச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் துரைமுருகன் பேசியதாவது:
”தமிழக சட்டப்பேரவையில் வரை விழா காணும், தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, நேரு குடும்பத்தின் 4 தலைமுறைகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், அந்த குடும்பத்திலிருந்து 5-வது தலைமுறையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ராகுல் காந்தி வந்திருக்கிறார்.
இந்த விழாவில் பல்வேறு தலைவர்களை ஒரே மேடையில் ஸ்டாலின் இணைத்து காட்டி இருக்கிறார். இந்த மாநாட்டை இந்தியாவே கூர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. இங்கு தேசிய ஒருமைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. 1967-ல் அறிஞர் அண்ணா ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கம்யூனிஸ்ட் தலைவரையும், ராஜாஜியையும் ஒரே மேடையில் அமரவைத்து ஓர் அதிசயத்தை செய்தார்.
அதேபோல இந்த அதிசயத்தை வேறு யாராலும் செய்ய முடியாது. அதே கம்யூன்ஸ்ட் கட்சியையும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியையும் ஒரே மேடையில் அமர வைத்த பெருமை ஸ்டாலினையே சாரும். இந்த ஒரு ராஜதந்திரம் போதும், இந்த இயக்கத்தை சிறப்பாக வழிநடத்துவார் என்ற தைரியம் எனக்கு வந்துவிட்டது” என்று துரைமுருகன் பேசினார்.