தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன்

தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருப்போரூரை அடுத்த பையனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊழலை விடவும், மது விடவும் கொடியது வகுப்புவாத வெறி. மதவாத அரசியலை வேரோடு களைய வேண்டிய தேவை இருக்கிறது.
எனவே தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம்.
நாங்கள் எந்தவித குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆகவே தலித் அல்லாத அனைத்து தரப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பொறுப்புகளை பெறலாம்.
வகுப்புவாத அரசியலை எதிர்த்து களம் காண வேண்டிய சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *