82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை: எடப்பாடி வழங்கினார்
பள்ளி கல்வித்துறையில் 82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில் 25 சதவிகித பணியிடங்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ் கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2016–-17–ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிர்ணயம் செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்பிட அரசாணை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (5–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ஆர். இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர் எஸ். கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.