திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும்: சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தகவல்
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங் கப்படும் என்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை இணைந்து உலக சுற்றுச் சூழல் தினவிழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது கழிவுகள் மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் சுருக்கத் தொகுப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை புத்தகம் ஆகியவற்றை வெளியிட்டு பேசியதாவது:
நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவை தற்போது மாசடைந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கழிவுகள் அதிகளவில் உருவாவதே இதற்குக் காரணம். நீர் மாசுபடுவதைத் தடுக்க அரசு பாதாள சாக்கடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறது. திடக்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை; கட்டுப் பாட்டில் உள்ளது. திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சாயப் பட்டறை கழிவுகளை சுத்திகரிப்பதற் காக ரூ.900 கோடி செலவில் சுத்தி கரிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கழிவுநீரை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் 2 புதிய இயந் திரங்கள் ரூ.1.50 கோடி செலவில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் முதற்கட்டமாக இந்த இயந்திரங்கள் நிறுவப்படும். நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை இந்த இயந்திரம் சுத்திகரிக்கும்.
கடல் அரிப்பைத் தடுக்க ரூ.660 கோடியில் திட்டம் ஒன்று தயாரிக்கப் பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் முனைவர் எச்.மல்லேசப்பா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலர் முஹம்மது நசிமுதீன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் நா.சுந்தரகோபால், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் எஸ்.செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை சென்னை ரயில் கோட்ட மேலாளர் நவீன்குலாதி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுகாதாரத்துடனும், பசுமையுடனும் இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்றார். சுற்றுச்சூழல் பிரிவின் மூத்த கோட்ட பொறியாளர் ஆர்.பரிமள்குமார் உட்பட ரயில்வே அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
ஆவடி சிவிஆர்டிஇ
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (சிவிஆர்டிஇ) நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதில் இயக்குநர் முனைவர் ப.சிவக்குமார் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கினார். பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள், அதிகாரிகள் மூலம் மரக்கன்றுகளை நட வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிறுவனத்தின் கூடுதல் இயக்குநரும், விஞ்ஞானியுமான எஸ்.சிவக்குமார், கூடுதல் இயக்குநர் லோகநாதன், முனைவர் ஏ.எம்.ஜூனைத் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவல் நிலையங்களில் மரக்கன்று
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் 30 மரக்கன்றுகள் நடப்பட்டன. காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் சேஷசாயி, ஜெயராம், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் சரவணன், ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.