பசுவை கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: உ.பி. டி.ஜி.பி மிரட்டல்
பசுவை கொல்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
பசு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு கேரளா, திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
இருப்பினும், மத்திய அரசின் நடைமுறைகளை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் மட்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில், பசுக்களை கடத்துவோர், கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அம்மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங்உத்தரவிடப்பட்டுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய, சுல்கான் சிங் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் மூன்று மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அம்மாநில டி.ஜி.பி.யின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.