தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் அளிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ‘பிளாஸ்டிக்’ அரிசி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. முதலில் ஹைதராபாத் நகரில் இந்தப் பேச்சு அடிபட்டது. பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதும், இதில் இருந்து வரும் கஞ்சி ஒரு வகையாக பிளாஸ்டிக் வாடை வருகிறது எனக் கூறப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில், இந்த வகை சாப்பாட்டை சாப்பிட்ட சிலர் அஜீரண கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கம்மம், நல்கொண்டா, மேதக் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, சந்தேகத்துக்கு இடமான அரிசியை மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து, அதனை ஆய்விற்கு அனுப்பி உள்ளனர். இதில் அரிசியின் எடையை அதிகரிக்க ஒருவகை பிளாஸ்டிக் பொருள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதன்கிழமை ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கந்துகூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் புகாரின்பேரில் வட்டாட்சியர், போலீஸார் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 50 அரிசி மூட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விசாகப்பட்டினம் உழவர் சந்தையில் உள்ள மொத்த வியாபார அரசி கடை ஒன்றிலும் சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசி குறித்த பயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் அரிசி குறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார்.

அதில், “தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி தரப்படுவதால் பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *