சுசீந்திரனின் ‘அறம் செய்து பழகு’ படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம்
சந்தீப் கிஷன் – விக்ராந்த் நடிப்பில் ‘அறம் செய்து பழகு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் சுசீந்திரன் ‘மாவீரன் கிட்டு’வைத் தொடர்ந்து இயக்கும் படத்துக்கு ‘அறம் செய்து பழகு’ என தலைப்பு வைத்தார். சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். சுசீந்திரன், இப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் சுசீந்திரன் ட்விட்டரில், ” ‘அறம் செய்து பழகு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டியுள்ளது.