தினகரனை விமர்சித்து எதுவும் பேசாதீர்கள்: அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டிடிவி தினகரன் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர்களின் இந்த கருத்துக்கு தினகரனின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு வாரமாக பரபரப்பு நிலவி வருகிறது.

தினகரனுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கும் அமைச்சர்களை தாக்கி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேட்டி அளித்து வருகிறார்கள். இதன் காரணமாக அ.தி.மு.க. அம்மா அணியில் மோதல் முற்றி சிக்கல் நீடித்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் யாரும் தினகரனை விமர்சித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட யாரும் தினகரனுக்கு எதிரான கருத்துகளை இனி தெரிவிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான கருத்து மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *