புர்ஹான் வானி நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீரின் மூன்று முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படை தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையால் கடந்த வருடம் ஜூலை 8-ம் தேதி புர்ஹான் வானி கொல்லப்பட்டார். இந்நிலையில் புர்ஹான் வானி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் புனித பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீரின் டிரால் உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புர்ஹான் வானியின் சொந்த ஊரான புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் நகரில் வன்முறை ஏற்படாமல் அமைதியை நிலைநாட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சோபியன் மற்றும் தெர்கஹம் நகரிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை” என்றார்.