ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
எல்லை கடந்து மீன்பிடிக்கும் தமிழக மீன்பிடி படகுகளுக்கு ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் இலங்கை அரசின் புதிய சட்டத்தைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
எல்லையைக் கடந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம், மீன்பிடி படகுகளுக்கு ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 141 படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று (ஜூலை 9) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எனவும், வரும் 14-ம் தேதி ராமேசுவரம் தபால் அலுவலகம் முன் மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவின்படி நேற்று ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், ஆயிரக்கணக்கான கடல்சார் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.
போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், “இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத் தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் மெத்தனத்தால் மீன்பிடித் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி பாரம் பரிய மீன்பிடிப்புப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் அல்லது கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றனர்.