திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், நலத்திட்ட உதவிகள்,ஸ்மார்ட் கார்டுகள் வழங்கினார் கலெக்டர் சந்தீப் நந்தூரி

 

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சங்கரன்கோவில் வட்டம், சுப்புலாபுரத்தை சார்ந்த மொட்டைசாமி என்பவரின் மனைவி வடகாசியிடம் விபத்து நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையினையும் கடல் கடந்த இந்தியருக்கு இழப்பீட்டுத் தொகை சவுதி அரேபியாவில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த பீர்முகம்மது என்பவரின் மனைவி செய்யஅலி பாத்திமா-விடம் ரூ.10,737க்கான காசோலையினையும், பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 2 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஒரு பயனாளிக்கு ஊனமுற்றோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், ஆலங்குளம் வட்டத்தைச் சார்ந்த 2 பயனாளிகளுக்கு ஊனமுற்றோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும் பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் திருவேங்கடம் வட்டத்தை சார்ந்த 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வீரரேளம்புதூர் வட்டத்தை சார்ந்த 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், சேரன்மகாதேவி வட்டத்தை சார்ந்த 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு நரிக்குறவர் தனிநபர் மானியமும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 45 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அலுவலர்கள் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் கலெக்டர் மூலம் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விண்ணப்பதாரர்களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, தாட்கோ மாவட்ட மேலாளர் மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சத்தியநாராயணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *