10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்: அமைச்சர் அறிவிப்பு

ஏழை-எளிய மக்களும் சத்துள்ள பாலை அருந்த ஏதுவாக 10 ரூபாய் விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை-எளிய மக்களும் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் ரூ.10-க்கு அறிமுகப்படுத்தப்படும்.
இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5 ஆயிரத்து 439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும். மருந்துவ வசதி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னையில் நுகர்வோர் நலனுக்காக, 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில், பணிபுரியும் 28 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.
50 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்னணு பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்படும்.
விருதுநகர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை நிறுவப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்படும்.
திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் அமைக்கப்படும். மாதவரம் பால்பண்ணைக்கு புதிய கொதிகலன்கள் வாங்கப்படும்.
திண்டுக்கல், கோவை ஒன்றியங்களில் 5 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட 2 புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை-எளிய மக்களுக்கு தொடர் வாழ்வாதாரம் கிடைக்க வகை செய்யும் வகையில் புழக்கடை கோழி அபிவிருத்தி திட்டம் (வீட்டிலேயே கோழி வளர்ப்பது) செயல்படுத்தப்படும்.
மானாவாரி நிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளில் மலட்டுத்தன்மையை நீக்கி உற்பத்தித்திறனை அதிகரிக்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு மலடு நீக்கத்திற்கான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவை இறைச்சிக்காக விற்கப்படுவது தடுக்கப்படும்.
மேலும் இக்கால்நடைகள் பால் உற்பத்திக்கு உகந்ததாக கொண்டுவரப்படுவதன் விளைவாக விவசாயிகளின் வருமானம் உயர வழிவகுக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள கால்நடை விவசாயிகளுக்காக 100 சிறு கால்நடை பால் பண்ணைகள் அமைக்க 1.25 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். ஓசூரில் நாட்டின கறிக்கோழி பெருக்க வளாகம் அமைக்கப்படும்.
தொலைதூர கிராம விவசாயிகளின் வசதிக்காக 100 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும். விவசாயிகள் பசுந்தீவனத்தை வளர்ப்பதற்காக ஆயிரத்து 100 மண்ணில்லா பசுந்தீவன அலகுகள் தோற்றுவிக்கப்படும்.
வெண்பன்றி இறைச்சி தேவை அதிகரித்து வருவதால் ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையின் பன்றி பிரிவு தொடங்கப்படும். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய பெரம்பூர், தேனி மாவட்டங்களில் புதிய 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவு தோற்றுவிக்கப்படும்.
செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி மற்றும் இடு பொருட்கள், கிராமப்புற 200 இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் புலிக்குளம் மாட்டினத்தை பாதுகாக்க சிவகங்கை மாவட்டத்தில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். காங்கேயம் மாட்டினத்தை பாதுகாக்க ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *