77 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை: எடப்பாடி வழங்கினார்
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (12–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான 75 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் மருத்துவச் சான்றின் பேரில் இயலாமையால் ஓய்வு பெற்ற 2 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், என மொத்தம் 77 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
பொதுப்பணித் துறையில் ஒப்பளிக்கப்பட்ட காலிப்பணியிடங்களில் இந்த 77 வாரிசுதாரர்களுக்கும் முதுநிலை வரிசைப்படியும், கல்வித் தகுதியின் அடிப்படையிலும் உதவி வரைவாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், ஆய்வக பணியாளர், ஆய்வக சிற்றெழுத்தர், தொலைபேசி எழுத்தர், உதவியாளர், பாசன உதவியாளர், காவலர், தோட்டக்காரர், துப்புரவாளர் ஆகிய பணியிடங்களில் கருணை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டடங்கள்) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) ஆர். ஜெயசிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.