உலக மக்கள் தொகை தினம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சவான் துவக்கி வைத்தார்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பேரூந்துநிலையம், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு சென்று நிறைவடைந்தது.
இப்பேரணியில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்கள், இந்துக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் கிறாஸ் மருத்துவ கல்வி நிறுவன மாணவ மாணவியர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) வசந்தி, ரியஸ் முகம்மது, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் (மாவட்ட குடும்ப நலச்செயலகம்) ஆர்.டேவிட் ஞானசேகர், தொ.விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.