தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும், அடுத்த 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும், இதனால் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் கனமழையோ மிக கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பருவமழை வலுப்பெறும் போது தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் சீற்றம் மிகுந்து காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.6, 7 தேதிகளில் தென்மேற்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.