ராகுல்காந்தியுடன் பிரியங்காவும் சீன தூதருடன் சந்தித்த புகைப்படம் வெளியானது
ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் சீன தூதரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டு போர் பதட்டம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள சீன தூதர் லுயோ ஷாஹுயை ரகசியமாக சந்தித்து பேசினார். இந்த தகவல் வெளியே கசிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலை உருவாகி இருக்கும் நேரத்தில் அவர் ஏன் சீன தூதரை சந்தித்தார்? என்பது மர்மமாக இருந்தது.
சீன தூதரை சந்தித்ததை ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார். அவர் தனது டுவிட்டர் தளத்தில் இது சம்பந்தமாக விளக்கமும் அளித்தார்.
அதில், சீன பிரச்சினை தொடர்பாகத் தான் நான் சீன தூதரை சந்தித்தேன். இதே போல் பூட்டான் தூதரையும் சந்தித்து பேசினேன். வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினேன். எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் இந்த சந்திப்புகளை மேற்கொண்டேன் என்று கூறி இருந்தார்.
ஆனால், இப்போது ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் சீன தூதரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக புகைப்பட ஆதாரம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் சீன தூதருடன் ராகுல்காந்தி, பிரியங்கா ராபர்ட் வதேரா ஆகியோர் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இது, உண்மையான படம்தானா? அல்லது வேறு படத்துடன் மார்பிங் செய்து போலியாக படம் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. ராகுல் காந்தியுடன் பிரியங்காவும், ராபர்ட் வதேராவும் ஏன் சென்றார்கள்? என்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படம் தொடர்பாக ராகுல்காந்தி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.